ஞாயிறு, 30 அக்டோபர், 2011

யாரறிவார் இவள் மனதை?

வரம் ஒன்று தந்தான் 
இறைவன் இலவசமாக 
அழுகையும் கண்ணீரையும் 

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய 
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே 
கனவாகியது எனக்கு.... 

வேதனை என்ற சொல்லுக்கு 
வரை விலக்கணம் தனைக் கூறியது 
கன்னங்களின் ஓரம் 
காய்ந்துபோன கண்ணீர்த்துளி.. 

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால் 
பொன்னகையில் பார்ப்பதை விட 
புன்னகையில் பார்ப்பது என்னை 
பகல் நேர பௌர்ணமிகளாய் 
தோன்றியது சிலருக்கு .... 

எனை நோக்கி அனுதாபம் 
அடைந்த சில நட்புகளை 
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால் 
காயம் கண்ட இதயமதை மீண்டும் 
காயப்படுத்திய உறவுகளை இன்னும் 
ஏற்கவில்லை என் மனம் ஏனோ? 

காலங்களும் கரைந்து சென்றது 
காட்சிகளும் மாறியது 
கனவுகள் போல 
கண்கள் கண்ட கனவுகளும் 
கலைந்து சென்றது 
கார்மேகம் போல... 

மனதில் எழுந்த கேள்விகளுக்கு 
விடை தேடுகின்றேன் 
நான் நாளும்.. 

மனித மனங்களும் மரித்து விட்டது 
இறைவனோ மௌனம் காக்கின்றான் 
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு.... 

பேதை இவள் பேதலிக்கின்றாள் 
வரும் கால வாழ்வை எண்ணி 
யாரறிவார் இவள் மனதை..

செவ்வாய், 25 அக்டோபர், 2011

வாங்க ஒரு கவிதைக்குப் போகலாம்!

ன்பே!
கவிஞர் ரவீந்திரநாத்
தாகூரை
எனக்கு மிகவும் பிடிக்கும்!
ஏன் தெரியுமா?
ரவீந்திரநாத் தாகூர்
உனது பெயரில்
அவர் ஒரு இலக்கியமே
படைத்தார்!
அவருக்கு விருதுகள்
கிடைத்தன!

உன்னை நேசித்த நாள்
முதல் நான் தாகூரையும்
நேசித்தேன்! அவரது
கவிதைகளைத்
தேடித் தேடிப் படித்தேன்!

உனது பெயர்
அவ்வளவு அழகு!
அதை விட நீ ரொம்ப அழகு!!
எனக்கும் உனக்கும்
அது முதல் காதல்!
அதனால் தான்
இருவரும் ஒரு வார்த்தைகூட
பேசவில்லை!

பார்த்துக்கொண்டோம்!
சிரித்துக்கொண்டோம்!
உனது புன்னகையில்
ஏக்கம் இருந்தது!
பார்வையில் காதல்
இருந்தது!
நளினமான உனது நடையில்
பெண்மை இருந்தது!

ஆனால் என்னிடம்தான்
தைரியம் இல்லை!
உன்னோடு வந்து பேச
துணிச்சல் இல்லை!
கல்வி ஒன்றே என்
கண்ணுக்குத்
தெரிந்தது!

நீ கணிதத்தில் வீக்கு!
ஆங்கிலத்தில் புலி!
நானோ கணிதத்தில் புலி!
ஆங்கிலத்தில் வீக்கு!

தப்பாக கணக்குப் போட்டு
நீ மாஸ்டரிடம் ஏச்சு வாங்கும்போது
நான் துடித்துப் போவேன்!
மின்னல் வேகத்தில் கணக்குகள்
செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்!
நீயோ கணக்குடன் மல்லுக் கட்டுவாய்!

அதுபோல, ஆங்கில வகுப்பில்
நீ அசத்திக் காட்டுவாய்!
ஆங்கிலக் கவிதைகள்
உனக்கு அல்வா சாப்பிடுவது போல!
எனக்கோ, அது வேப்பங்காய் போல!

ஒருநாள் கணிதப் பரீட்சை நாள்!
நீ என்னிடம் வந்து கேட்டாய்,
“ உங்கள் மூளையை எனக்கு
இரவல் தாறிங்களா?”
எனக்கோ தலைகால் புரியவில்லை!
நீ பேசிவிட்டாய்! ஆறுமாதங்கள்
வெறும் பார்வையை மட்டுமே
பரிமாறினோம்!
இன்று நீ பேசிவிட்டாய்!

நானும் பதிலுக்குச் சொன்னேன்!
“ ஆங்கிலப் பரீட்சைக்கு உங்களது
மூளையைத் தருவீர்களா?”
நீ புன்னகை செய்தாய்!
வெட்கப்பட்டாய்!
அன்று இருவருமே வானில்
பறந்தோம்!
இந்தப் படத்துக்கும் கவிதைக்கும் யாதொரு சம்மந்தமும் கெடையாது! ஹி ஹி ஹி !

உனது பெயர் வருகிறது
என்பதற்காக டூயற்
படத்தில் அத்தனை
பாடல்களையும் நான்
மனனம் செய்தேன்!
ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு
கடவுளானார்!

பேபிஷாலினியின் ஒரு
திரைப்படத்தை பல முறை
பார்த்தேன்!
சரத்குமாரின் “ பேண்ட் மாஸ்டர்”
படத்தையும் பாடல்களையும்
ரொம்ப ரொம்ப நேசித்தேன்!

உனது பேரையும்
எனது பேரையும்
தாங்கியவாறு
“ நான் அடிமை இல்லை”
படத்தில், ஒரு பாட்டு உண்டு!
அந்தப் பாடலை ஆயிரம்
முறை கேட்டிருப்பேன்!
எஸ்.பி.பாலாவுக்கும் ஜானகிக்கும்
கோயில்கட்ட நினைப்பேன்!

எல்லோருக்கும்
வாழ்வில் முதல்
மறக்க முடியாதது
முதல் காதல்!
எனக்கும் தான்!

காதல் என்றாலே
என்னவென்று தெரியாத
ஒரு கனவுக்காலம்
அது!
நாமும் கனவுகள் கண்டோம்!
கற்பனைகள் செய்தோம்!
காதலை மட்டும் சொல்லவே
இல்லை!

இப்போதும் உன்னை
நினைத்துப் பார்ப்பதில்
எனக்கு ஒரு சுகம் உண்டு!

ம்........ முதல் காதலையும்
முதல் முத்தத்தையும்
மறக்க முடியாது என்பது
உண்மைதான்!

அன்பே! ஒரு சின்ன வேண்டுகோள்!
என்னை விட, குளிர் மிகுந்த
நாட்டில் நீ வாழ்கிறாய்!
குளிரில் இருந்து
பாதுகாப்பாக இரு!

ஹி ஹி ஹி எனக்குத்
தெரியும் உனக்கு குளிர்
அலர்ஜி என்று!

அது சரி, நீ இன்னும் என்னை
மறக்கவில்லைத் தானே!