திங்கள், 25 அக்டோபர், 2010

யாரறிவார் இவள் மனதை?

வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....

எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை...

செவ்வாய், 12 அக்டோபர், 2010

தன்னம்பிக்கை

வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!

இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்

முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…

தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற

வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!

வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.

உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.

உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை

குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை

உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை

இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை

தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்

மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை

தன்னம்பிக்கை

வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!

இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்

முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…

தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற

வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!

வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.

உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.

உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை

குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை

உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை

இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை

தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்

மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இலங்கை எரித்த தீயே..

சீதை கரங்கொண்டோன் தூதன் அனுமந்தின்
வாலினில் பற்றிய தீ
தூதைப் பழித்திடக் கோபங் கொண்டேயிந்த
தீவை அழித்துநின்றாய்
மாதைத் தமிழ்ச்சிறு மங்கை மானமழித்
தாடிக் குதிப்பவர்கள்
நீதிகேட்டே யவர் நீசர்கள் பூமியை
மீண்டும் எரிப்பாயோ?

ஆளும் மன்னன் கொடுங்கோலன் என்றேநீதி
கேட்க மதுரையிலும்
காலிற் சிலம்புகை கொண்டவள் கண்ணகி
சொல்ல எரித்தொழித்தாய்
பாழு மரசொன்று நீதியின்றிக் கொடுங்
கோல்கொண்டு நிற்குதிங்கு
தீயே மறைந்து நீ நின்றது போதுஞ்
சினங்கொண்டழித்துவிடு

போரில் பகைவென்று பூவையர் கூட்டமாம்
பேசும்தமிழ்க் குலத்து
நேரின்று தாவென்று வாழக்குரலீந்த
வஞ்சியர் தம்மையின்று
வாரி இழுத்தொரு பாசறைக் கூட்டுக்குள்
வைத்துச்சி தைத்தவரை
கீறிக் கிழித்துமெய் கெட்டழித்துக்
கூத்தாடுது பேய்களின்று

வந்தே யெரித்து ஒழித்துவிடு அந்தவன்மை
மனங்களெல்லாம்
வெந்த மனங்களின் பேய்பிடித்தபுத்தி
செய்யும் விகாரமெல்லாம்
தூயதென அந்தப் பூமியாக்கித் தமிழ்த்
துன்பம் களைந்துவிடு
நீயும்வந்து கேளா விட்டுவிட்டால் நீதி
கேட்பது யார்தானிங்கு

பாரதப்போர் ஒரு பாவைதிரௌபதியின்
சேலை பறித்ததனால்
நூறு எனப்பல திரௌபதிகள் இன்று
சேலையிழந்து நின்றார்
ஓருடைபோக இன்னொன்றிதோவென
மாதவன்கை கொடுத்தான்
ஆருயிர் தங்கையர் கேட்டுக்கதறியும்
சேலைகள் நீண்டதில்லை

மாதவன் போலொரு ஆதவன் மானமே
காத்திடத் தானெழுந்தான்
பாதகன் பக்கம் பலங்கொடுத்துத் தமிழ்ப்
பூமியை யேன்பறித்தார்
நீதி மறைந்தது நீசர் எழுந்தனர்
நெஞ்சழ மங்கையரோ
பாதி உயிருடன் போதைக் கொண்டோர்
தமக்கோர் உணவாவதென்ன?

சாக நினைத்துயிர் போகும்வழி யின்றி
சேயிழை யார்துடித்தே
வேகு முடலவமானம் கொண்டே யவர்
விழிகள் நீர்தழும்ப
பாவிமகனவர் காலடி வீழ்ந்துடல்
நோகத் துடிப்பதனை
கூவியழும்குரல் ஓலம்நிறுத்திட
வானளவாய் எரியாய்

ஊனை விட்டு உயிர் போவதனாலேயே
வேதனை தீருமென
உண்ணு முணவினில் ஓர்துளி நஞ்செனும்
ஊற்றித் தருவினரோ
தின்னும் கவளமும் தொண்டை நடுவினில்
சிக்கித்திணறிடுமோ
கண்ணும் உறங்கிடக் காலன்வந்து உயிர்
கொள்ளவும் மாட்டானோ?

என்று கலங்கி மயங்கிச் சிறைதனில்
வெம்பி அழுதுகொள்ளும்
நல்ல வர்காத்திட நாடெங்கும் பற்றியோர்
நாசம் எரிக்காயோ
பூமி யெரித்தது அன்று முடிந்தது
போகட்டும் விட்டுவிடு
பாழும் மனங்கொள்ளும், எண்ணமெரித்திடு

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தமிழியக்கம் - வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு


ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேற்றம்!

கண்டறிவாய்! எழுந்திரு நீ!
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொ ழிந்த

பண்டைநலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும் நீ
படைப்பாய்! இந்நாள்

தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!

உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி!

அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
நாம டைந்த

துயரத்தைப் பழி தன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்

செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சிறி வந்தே.

வாழியநீ! தமிழ்த்தாய்க்கும்
வரும் பெருமை உன் பெருமை!
வயிற்றுக் கூற்றக்

கூழின்றி வாடுகின்றார்;
எழுந்திருநீ! இளந்தமிழா
குறைத விர்க்க

ஆழிநிகர் படைசேர்ப்பாய்!
பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்கு விப்பாய்!

ஊழியஞ்செய் தமிழக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே,

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!

பிணிநீக்க எழுந்திருநீ
இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்

கணிசெய்யும் இலக்கியம் செய்!
அறத்தைச் செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!

பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட்டானே,

எதுசெய்ய நாட்டுக்கே
எனத்துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,

புதுநாளை உண்டாக்கித்
தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே

அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்!

இதுதான் நீ செய்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.

பாரதிதாசன்

காதல் மொழிகிறது


குடையின் ஆதரவில்
நம்மை விட்டு விட்டு
அத்தனையும்
நனைத்து போனது மழை!
காதலினால் கனன்ற காமம்
தீப்பிடிக்க சாம்பலானது
நாகரீக முகமூடி!

***************************

தோட்டத்து பூக்கள்
மழையில் குளித்தன!
காய்ச்சல் வந்ததெனக்கு
என் பார்வையில்
அவையெல்லாம் நீயானதால்!

***************************

பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்
மனதில் வந்து போகிறதுன் முகம்!
சபிக்கிறேன் நான் மின்னலை
சற்று நீடித்தாலென்னவென்று?

***************************

உன் இதழ்களை கவனித்தவாறே
உரையாடுகிறேன் இப்போதெல்லாம்!
உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது
எனக்கான காதல் உதிராதாவென்று?

***************************

நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில்
நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம்
சொல்லாமல் சொல்லிப் போனது
நம் கண(ன)ம் பொருந்திய காதலை!

***************************

ஆழியில் வசிக்கும் சிப்பியானது
வானிலிருந்து மழைத்துளியொன்றை
உள்வாங்கி முத்தாக்குமாம்!
நீ தந்த முத்தமும் அதுபோலவே
வெட்கத்தை தின்று நம்முள்
காதலை கருவாக்கியது!

கயல்விழி சண்முகம்

அன்பென்றால் காதலா?


முகஸ்துதிக்கு முறுவலித்தால்
முழம் போட்டு பின் தொடர்ந்து
முழுவதுமாய் அளந்து
முழுதாய் விலை பேசி
முகவரி கேட்கின்றாய்
புன்னகைக்கு விலையேது? பெண்ணை
புண் நகை செய்யாதே!

அன்பைக் கொட்டிப் பேசினால் காதலை
அள்ளி விடும் கண்ணன்களே!
‘அங்கே’ அவளுக்கு நீங்கள் அல்லவா?
பெண்கள் இதயமெல்லாம்
உனக்குள் என்று தொடத்துடிக்கும்
நீங்கள் கண்ணா!

இளமையை ஏன்?
விலையாக்கின்றீர்கள்
‘அவளுக்கு’ ஒருவனாய் வாழ்ந்தால்
அது சுகம்
ஆயிரத்தில் ஒன்றாக ஆசை வைக்காதீர்
பேச்சுக்கள் மட்டும் பெரிதல்ல...
பெண்மை என்பதெல்லாம்
உனக்கு மட்டுமா?
கன்னிகளின் உள்ளங்களை
காயப்படுத்தாதீர்

நன்றி: பீஷான் கலா

கண்ணீரில் கரையும் தலையணைகள்





























கண்ணீரில் கரையும் தலையணைகள்
கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும்
கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய்
எல்லைகாணா மனவெளி முழுதும்
அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள்

சொர்க்கமே! உனை
பாலிக்க வேண்டிய பொழுதுகளில்
ஏனெனக்கு இன்னுமோர் பணியும்
அதற்கான பயில்வுகளும்?

ஊட்டமுடியாத தொலைதூரமதில்
ஒரு நெடுநாட்துயர்போலே
இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே
உனக்கேயான திருவமுது

சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே
எனக்கீடாய் உனக்கில்லையென்றே
உணர்ந்திருந்துங்கூட
நாட்களாய்………!
வாரங்களாய்………!
மாதங்களாய்………!
விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து.

கற்பூரதீபமே! வேண்டுமானால்
இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணைகளைக்கூடக்
கேட்டுப்பார்! என்
கண்ணீர்ச்சூட்டிலவை கரைந்துபோன கதைசொல்லும்.
நிலாக்குஞ்சே!

நீயென்ன அடியிறுகிய ஆதி உயிரியா?
ஆயிரந்திரி நனைக்கும் ஜதரோக்காபனுக்காய்
தனிமைப்பொறியிட்டு உனை நானும்
உருக்கிப் பிழிகின்றேனே!

அந்திநேரச சூரியனாய் அடிவானச்சுக்கிரனாய்
பூரணைச்சந்திரனாய்………
பூமகளேயென் மனவான்முழுதும்
நீயேதான் ஜொலிக்கிறாய்!
என்றாலும் என்னவளே!
என்னால் நீயிழந்த இருவருட வாழ்க்கையினை
எதனைத்தந்து நானும் மீளநிரப்ப!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இனியும் தமிழன் ஏமாறமாட்டான்

நிச்சயம் என்றேற்றால் சத்யன் உதிப்பான்
அபயம் என்றால் அமுதன் ஆதரிப்பான்
சமயம் பார்த்தால்சாய்ந்திட மாட்டான்
இதயம் மாய்ந்தால் சோர்ந்திட மாட்டான்

கப்பலெற்றி தரம் பிரிக்க சரக்காக இருக்கார்
துப்பு துலக்கி திறம்சோதிக்க நறுக்காகார்
தப்பல்ல விலக்க நனி கூற்றுக்களாகார்
குப்பையல்ல கழிக்க இனி பேச்சுக்கள் ஆற்றார்

தரணி பேச தமிழ் மணம் பரப்புவார்
சீரணி நெகிழ தமிழர் மனம் திறப்பார்
அணிதேசம் தமிழ்த் திணம் கூட்டுவார்
நாணி நிற்காமல் தமிழர் குணம் செப்புவார்

சபை கேட்க கவித்தமிழ் இசைப்பார்
இசை பாட புவி களி கொள்வார்
அவை நாடி கேள்வி கணை தொடுப்பார்
சுவை கூட்டி தமிழை தினம் வளர்ப்பார்

கண்ணாக தமிழை கட்டிக்காப்பார்
பண்ணாக அழகை மீட்டி இரசிப்பார்
பஞ்சாக உயிர்தமிழை ஆகாயத்தில் தூசாக்கார்
நெஞ்சார மெய்த்தமிழை நேயமுடன் நேசிப்பார்

ஏட்டுச்சுரக்காய் அல்ல தமிழர் எழுதி அழிந்திடார்
கட்டு மரக்கலமல்ல தமிழ் திசை மாறி சென்றிடார்
சிட்டுச்சிறகல்ல நொடித்தொடித்து வீழார்
பட்டுத்துகில் அல்ல உடுத்து கழைந்து விடார்

தவழ்ந்து தத்தி தமிழ் நடை பயில்வார்
மகிழ்ந்து ஏற்றி எழில் உடை அணிவார்
நுழைந்து காட்டி உலக ஏட்டில் இடம் பிடிப்பார்
கவிழ்ந்து வீழ்த்தினும் இமயமேட்டில் தடம் பதிப்பார்

உதிரம் கலந்து உயிர்த்த தமிழ் ஒழியார்
உதரம் எரிய துளைத்தால் தமிழர் கொதிப்பார்
கதையும் சாற்றி மறுத்தால் ஈவு பாரார்
எதையும் கூறி கிறங்க நாவில் சேரார்

மொழி தேன் மலரல்ல முகர்ந்திட மறந்திட மாட்டான்
தமிழ் தொனி பனியல்ல உணர்ந்திட மரத்திட மாட்டான்
தமிழ் பசுமை இலையல்ல உதிர்ந்திட உலர்ந்திட மாட்டான்
செம்மொழி இணையில்லா தமிழன் இனியும் ஏமாறமாட்டான்


- அருந்தா

வெள்ளி, 9 ஜூலை, 2010

தெரியாத என் காதல் பயணம்

உலகில் எத்தனையோ பெண்
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலர்ந்தது


அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை

பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்


அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன


தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை

நானும் நம் காதலும்..!


எனை நீ- பிரிந்து
காலங்கள் பல கடந்தும்
உன்னைத் தேடியே
நான் இன்றும்
பயணித்துக்
கொண்டிருக்கிறேன்

என் உயிரில் சிதறிய
உன் நினைவுத்துளிகளில்
நான் நிதமும்
நனைத்து கொண்டிருக்கிறேன்!

இன்னமும் எனக்கு
பழக்கப்படவில்லை
உன் நினைவின்றி
வாழ்வதற்கு!

என் உயிரில்
வாழ்ந்து விட்டு
என் நிழலைக் கூட
நிராகரித்துச்
சென்றுவிட்டாய்!

வண்ணத்தை
தொலைத்த
வண்ணத்துப் பூச்சியாய்

உயிர் இருந்தும்
பொம்மையாய்
நானும் நம் காதலும்
தவித்து நிற்கிறோம்
தனித்து நிற்கிறோம்

என் நினைவுகளை
நீ-இன்று
உதறிவிட்டாலும்

என் உயிரிருக்கும் வரை
உன் நினைவில்
மட்டுமே
உயிர் வாழ்வேன்!

ஒருவேளை
நான் இறந்தாலும்
உன் நினைவோடுதான்
உயிரையும் விடுவேன்!!

வியாழன், 8 ஜூலை, 2010

த‌மிழ‌னுக்கு வேத‌னைக் கூட‌ம் சைனாவுக்கோ சோத‌னைக்கூட‌ம்..


விடிந்தால் ம‌டிவோமா?
இல்லை
ம‌டிந்தால் விடியுமா? யென‌
ம‌ர‌ண‌ அச்ச‌த்தின் மிச்ச‌மாய் நின்ற‌
ம‌க்க‌ள் வெள்ள‌ம்...

காட்டிக்கொடுத்த‌ த‌மிழ‌னின் வினையால்
காட்டிய‌ இட‌த்திற்கு வ‌ந்தான் த‌மிழ‌ன்
கூடிய‌ இட‌த்தில் வீழ்வான் த‌மிழ‌ன் யென‌
ராஜ‌ ப‌ட்சிக‌ள் மாமிச‌ம் திண்ண‌
வ‌ட்ட‌ம‌டித்த‌ சூட்ச‌ம‌ இட‌ம்....


கோடி செல‌வுக‌ள் செய்து த‌யாரித்த‌
உயிர்கொல்லி ஆயுத‌ம் உத‌வுமாயென்று
வ‌ல்ல‌ர‌சு நாடுக‌ள் அள்ளிக் கொடுக்க‌...
ப‌திலுக்கு க‌ருகிய‌ எம் ம‌க்க‌ளை வாரி கொடுத்த‌
த‌மிழ‌னுக்கு வேத‌னைக் கூட‌ம்
சைனாவுக்கோ சோத‌னைக்கூட‌ம்...

த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ ஆயுத‌திற்கு
அங்கு த‌டைக‌ள் இல்லை
த‌மிழ‌னை அழிப்பதே அவ‌ர்க‌ளின்
த‌லையாய‌ கொள்கை....


போர் ம‌ரபு கூறிய‌ முதியோர், சிறியோர்?
போர் ம‌ர‌பு மீறிய‌ குற்றுயிர் ம‌ர‌ண‌ம்
க‌ண்டும் காணாத‌ ஐநா சாச‌ன‌ம்
க‌ட்டிக் காத்து
காட்டி கொடுத்த‌து இந்திய‌ சீத‌ன‌ம்

ஆயிர‌க்க‌ண‌க்கில்
ம‌க்க‌ளைக் கொன்று
அழித்தொழித்த‌
முள்ளிவாய்க்காலில்
பெறுக்கெடுத்த‌ ம‌னித‌ரெத்த‌ம்
உல‌க‌த் த‌மிழ‌ர் நெஞ்சில் பாய்ந்து
வ‌ள‌ர்த்தெடுக்குது த‌மிழிழ‌த்தை...

புதன், 30 ஜூன், 2010

என் மனதில் என்றும் நீங்காதிருக்கும்

என் மனதில் என்றும் நீங்காதிருக்கும்
என்றும் அழியாப் புகழுடைக் கவிஞன்
எங்கும் எதிலும் கவியாய் வாழும்
என் ஞானக்குருவே கண்ணதாசா !
தமிழென் உள்ளத்தைத் தாலாட்ட
தங்கப்பாடல்கள் தந்தவன் நீ
தமிழின் பெருமை ஓங்கி உயர
தமிழாய் சுவாசத்தில் நிறைந்தவன் நீ
ஓடி ஓடிக் களைத்து இன்றெனக்கு
ஓய்வு வேண்டும் என நெஞ்சு கேட்கையில்
இதமாய் வருடிக்கொடுத்து தாலாட்டுது உன்
இனிமையான பாடல்கள் என்னுள்ளத்தை
கற்றது கையளவு புவியில் நாம்
கல்லாதாது கடலளவு என்றாள் மூதாட்டி
கற்ற அனுபவங்கள் அனைத்தையும்
கக்கினாய் மற்றவர் வாழ்வை உணரவே !
நாட்டு எல்லைகள் கடந்ததைய்யா
நல்ல உன் கருத்தான பாடல்கள்
நானிலத்தில் தமிழால் அனைவரும்
நண்பராய் வாழ வேண்டுமய்யா
உள்ளத்தை உறவுகள் மாறி மாறி
உடைத்த வேளைகளில் எல்லாம்
உயிரை நண்பர்கள் துவைத்த வேளைகளில்
உரமாய் எனக்கு துணையானது உன் பாடல்களே
நீ வாழ்ந்த காலங்கள் கொஞ்சம் தான்
நீங்காத தடங்களாய் நீ விட்டுச் சென்ற
நினைவகலாப் பாடல்கள் கவிதைகள்
நித்திய ஞாபக ஆராதனை உனக்கு
ராமன், இயேசு, அல்லா என அனைவரும்
அகிலத்தில் சமனெனப் பாடி நீ
அடைந்தது தேசிய விருதே ! மறவோம்
அனைவரும் நீ சொன்ன உண்மையை
கவிதைகளின் தாசனே தமிழின் நேசனே
கண்டோம் அடுத்தொரு நினைவுநாள்
கணோம் உன்போல் கவி இனியொருநாள்
காத்திருப்போம் உன் நினைவுகளை எந்நாளும்
உனது ஆசி வேண்டி இங்கொரு தம்பி
உனது பாதங்களில் தலைவைத்து
உன்நினைவுநாளில் வணங்குகிறேன்
உன் ஆசியால் அன்புடன் தமிழ்பூத்து குலுங்கட்டும்

திங்கள், 28 ஜூன், 2010

நான் பைத்தியம்தானடா..

என்னை காதலிகிறேன் என்று சொல்லி கரம் பிடித்தவனே
இன்று என்னை நட்ட நடு வீதியில் தவிக்க விட்டு
நீ மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்கிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதுடா
பதிலை சொல்லடா எனக்கு...?

நான் உன்னை காதலித்தது பாவாமா..?
இல்லை உன் நினைவால் தினம் தினம்
நான் தவிப்பது பாவாமா... ?
நீதான் வேண்டும் வேண்டும் என்று
உந்தன் பின்னால் அலைவதா...?
எதடா நான் செய்த பாவம்...?

காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில்
போராடி கொண்டு இருக்கிறேன்
என் போராட்டத்துக்கு முடிவேயில்லையா

காலங்களோடு போராடுகின்றேன்..
காத்திருப்போடு தவிக்கிறேன்..
காயப்பட்ட உள்ளம்
கண்களில் காணல் நீராய் தினம் தினம்
கண்ணிர்த் துளிகள் வடிகின்றது ..

என்னை பைத்தியக்காரி என்கிறாய்
நான் பைத்தியம் தானாடா என்னை தூக்கி எறியும்
உன்னை தேடித்தேடி அலைகிறேனே
நான் பைத்தியம்தானடா..

கண்ணகி மண்ணிலிருந்து

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...


பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!


குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!


ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!


ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!


மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!


தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!


இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!


தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!


வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!


நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!


எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!


நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...


அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்.

-தாமரை-

நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!


குழந்தைகள்
அன்பான மனைவி
நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும்
எப்படி மறப்பதோ உன் நினைவை,

இதயம் சுட்டு சுட்டு
வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும்
எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும்
இக்காலம் -
எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா,

என்றோ காதலித்தோம்
இரண்டு வீட்டின் நன்மைக்காய்
பிரிந்தோம் -
பிரிந்திப்படி உயிர்தின்று வாழ
எப்படி சம்மதித்துக் கொண்டோமோ;

உலகமெலாம் சுற்றுகிறேன்
வருடங்கள் பலதை
வயதால் விழுங்கி விட்டேன்
நரை தட்டியும் போகலாம் - உன்
நினைவொழித்த பாடில்லையே;

நீ நடந்து வந்த சப்தம்
எனை அழைத்த ஜாடை
பேசிய விழிகள்
தொட்டுப் பார்த்த உணர்வு
எனக்காய் காத்திருந்த தவிப்பு
பிரிகையில் அழுத அழை; அழை; அழை....

எப்படி மறகுமோ என்; நெஞ்சே...????

வயதறியாத வேகம்
எதையோ தியாகம் செய்வது போன்ற எண்ணம்
வேறு வழி தெரியாத முடிவு
இப்பிரிவின் வலியை -
அன்றறிய சாத்தியமில்லாத தருணம்
இப்படித் தான் கொள்கிறதா உன்னையும்???

எனை உயிராய் சுவாசிக்கும் மனைவி
உனை பற்றி கேட்டு விமர்சிக்கும்
பிள்ளைகளுக்கு சொன்னளவு கூட
உன் மேல் வைத்திருந்த அன்பை -
உன்னிடம் சொல்ல முடியாமல் போனதே
வருட காலமாய் வலிக்கிறது போல்;

பாடல் கேட்க கொள்ளாத பொறுமை
ஒரு படம் பார்க்க ஒதுக்காத நேரம்
சிரித்துப் பேச கூட இல்லாத மனம்
அத்தனைக்கும் காரணம் -
நீயென்று சொல்லி
நான் யாருக்குப் புரிய வைத்து
வேறென்ன நிகழ்ந்துவிடும் இனி??

சோகமாய் அமர்ந்தால்
ஓரிரு வார்த்தையில் -
'குடும்பம் ஆச்சி, குழந்தைகள் இருக்கு..,
மறந்துடு; அவ்வளவு தான்' -
என்று சொல்பவர்களுக்கு
நீயென்பதோ நானென்பதோ
புரியாத; ஒற்றை வார்த்தை 'காதல்' மட்டுமே!

காதலித்தால் மறுக்கும் சமூகம்
நினைத்து அழுதால் கண்தொடைக்க
இயலாத மனிதர்கள்
பிரிக்க மட்டும் கொண்டு வரும் நியாயத்தில்
இனியாவது -
ஜாதியையும் மதத்தையும் ஏற்றத் தாழ்வையும்
நம்மை போன்றோரை பார்த்தாவது
அகற்றிக் கொள்ளட்டும்.

அன்றும் இன்றும்
மனதை மட்டும் அப்படியே
வைத்துக் கொண்டு
வெறும் மனிதர்களை கடந்து
நாட்களை கடந்து
வாழாத பொழுதுகளாய் வெற்றிடம் கொள்கிறதே
வாழ்க்கை; யார் காரணமாவார்???

இதோ, போகட்டும் பிதற்றல். என
முடித்துக் கொள்கிறேன்,
அழும் மனதோடு உதட்டை விரித்து
சிரித்துக் கொள்கிறேன்,
இன்னும் நூறு வருடம் வாழ
என் சுற்றத்திற்காய் - எல்லாவற்றையும்
தாங்கிக் கொள்கிறேன்,
யாரேனும் கேட்டால் நலம் என்றே
சொல்லிவிடுகிறேன்,
நீயும் அப்படியே சொல்;
நம்பிக் கொள்ளட்டும் உலகம்!!

சனி, 26 ஜூன், 2010

மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன.

சிலவேளை மாடுகள்
பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.

மேய்ச்சல் தரைகளில்
குண்டுகள் காத்திருந்தன.

மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.
மிஞ்சியிருக்கும் இரண்டு
மாடுகளின்
சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.

மாதாவின் தலை
அவளது கைகளுக்கு
எட்டாமல் விழுந்திருக்கிறது.
மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.
தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்
வாழுகிற மாடுகளாயிருந்தன.
தடைசெய்யப்பட்ட
குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.

ஒரு குழந்தை
வாய்க்காலில் மறைந்து
தப்பியிருக்க
மாட்டுக்கன்றுகள்
பால் காயு முன்பாகவே
இறந்து கிடக்கின்றன.

கொம்பு முளைத்த மாடுகளிடம்
எந்தத்துவக்குகளும் இல்லை.
இராணுவ உடைகளையும்
அணிந்திருக்கவில்லை.

வெடித்துச் சிதறிய குண்டு
மாடுகளை அள்ளி எடுத்த
பட்டியில்
துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.
சிதறிய சதைகளை
தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்
நாய் ஊளையிடுகிறது.

பாலுக்கு அழுகிற குழந்தை
தலை துண்டிக்கப்பட்டிருக்கிற
மாதாவை தேடுகிறது
இறந்த பசுவை
தேடுகிற கன்றினைபோல.
காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்
பட்டியிலிருந்தும்
மேய்ச்சலுக்காய் திரிந்த
தரைகளிலிருந்தும்
குருதிதான் பெருக்கெடுக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?
பசுக்கள் குழந்தைகளுக்கு
பாலினை கொடுத்தது
பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.

வாய்களை மீறி
மாடுகளிடம் அழுகை வருகிறது.
அவைகள் எதையும் பேசப்போவதில்லை?
குண்டுகளோடும்
கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்
அதிகாரத்தோடும்?

மாதாவிடமும் எந்த
திருச்சொற்களும் இல்லை.
மாதாவும் மாடுகளும்
வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க
மேய்ச்சல் தரைகளில்
மேலும் பல குண்டுகள் காத்திருந்தன.

கவிஞர். தீபச்செல்வன் எழுதியது

வெள்ளி, 25 ஜூன், 2010

கல்லறையின் பயங்கரத்தை எனக்களிக்கவும்

அன்பான சடலங்களே!
நீங்கள்தான் ஒரு காலத்தில் எனது தாயகத்தின்
நம்பிக்கையாய் விளங்கினீர்கள்
சிதைவுறும் உங்கள் எலும்புகளின் துகள்களை
என் நெற்றியில் இடுங்கள்!
உங்கள் குளிர்ந்த கரங்களால்
எனது இதயத்தை தொடுங்கள்!
எனது காதுகளில் ஓங்கி அரற்றுக!
எனது முனகல்கள் ஒவ்வொன்றும்
இன்னுமொரு கொடுங்கோலனின்
கண்ணீராக மாறும்!
என்னை சூழ்ந்திடுங்கள்!
உங்கள் உணர்வுகளை
எனது ஆத்மா உள்வாங்கவும்
கல்லறையின் பயங்கரத்தை எனக்களிக்கவும்
என்னைச் சுற்றித் திரியுங்கள்!
இழிவான அடிமைத்தனத்தில்
ஒருவன் வாழும்போது
கண்ணீர் துளிகள் மட்டும் போதா!