ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கண்ணீரில் கரையும் தலையணைகள்





























கண்ணீரில் கரையும் தலையணைகள்
கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும்
கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய்
எல்லைகாணா மனவெளி முழுதும்
அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள்

சொர்க்கமே! உனை
பாலிக்க வேண்டிய பொழுதுகளில்
ஏனெனக்கு இன்னுமோர் பணியும்
அதற்கான பயில்வுகளும்?

ஊட்டமுடியாத தொலைதூரமதில்
ஒரு நெடுநாட்துயர்போலே
இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே
உனக்கேயான திருவமுது

சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே
எனக்கீடாய் உனக்கில்லையென்றே
உணர்ந்திருந்துங்கூட
நாட்களாய்………!
வாரங்களாய்………!
மாதங்களாய்………!
விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து.

கற்பூரதீபமே! வேண்டுமானால்
இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணைகளைக்கூடக்
கேட்டுப்பார்! என்
கண்ணீர்ச்சூட்டிலவை கரைந்துபோன கதைசொல்லும்.
நிலாக்குஞ்சே!

நீயென்ன அடியிறுகிய ஆதி உயிரியா?
ஆயிரந்திரி நனைக்கும் ஜதரோக்காபனுக்காய்
தனிமைப்பொறியிட்டு உனை நானும்
உருக்கிப் பிழிகின்றேனே!

அந்திநேரச சூரியனாய் அடிவானச்சுக்கிரனாய்
பூரணைச்சந்திரனாய்………
பூமகளேயென் மனவான்முழுதும்
நீயேதான் ஜொலிக்கிறாய்!
என்றாலும் என்னவளே!
என்னால் நீயிழந்த இருவருட வாழ்க்கையினை
எதனைத்தந்து நானும் மீளநிரப்ப!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக