திங்கள், 28 ஜூன், 2010

நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!


குழந்தைகள்
அன்பான மனைவி
நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும்
எப்படி மறப்பதோ உன் நினைவை,

இதயம் சுட்டு சுட்டு
வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும்
எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும்
இக்காலம் -
எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா,

என்றோ காதலித்தோம்
இரண்டு வீட்டின் நன்மைக்காய்
பிரிந்தோம் -
பிரிந்திப்படி உயிர்தின்று வாழ
எப்படி சம்மதித்துக் கொண்டோமோ;

உலகமெலாம் சுற்றுகிறேன்
வருடங்கள் பலதை
வயதால் விழுங்கி விட்டேன்
நரை தட்டியும் போகலாம் - உன்
நினைவொழித்த பாடில்லையே;

நீ நடந்து வந்த சப்தம்
எனை அழைத்த ஜாடை
பேசிய விழிகள்
தொட்டுப் பார்த்த உணர்வு
எனக்காய் காத்திருந்த தவிப்பு
பிரிகையில் அழுத அழை; அழை; அழை....

எப்படி மறகுமோ என்; நெஞ்சே...????

வயதறியாத வேகம்
எதையோ தியாகம் செய்வது போன்ற எண்ணம்
வேறு வழி தெரியாத முடிவு
இப்பிரிவின் வலியை -
அன்றறிய சாத்தியமில்லாத தருணம்
இப்படித் தான் கொள்கிறதா உன்னையும்???

எனை உயிராய் சுவாசிக்கும் மனைவி
உனை பற்றி கேட்டு விமர்சிக்கும்
பிள்ளைகளுக்கு சொன்னளவு கூட
உன் மேல் வைத்திருந்த அன்பை -
உன்னிடம் சொல்ல முடியாமல் போனதே
வருட காலமாய் வலிக்கிறது போல்;

பாடல் கேட்க கொள்ளாத பொறுமை
ஒரு படம் பார்க்க ஒதுக்காத நேரம்
சிரித்துப் பேச கூட இல்லாத மனம்
அத்தனைக்கும் காரணம் -
நீயென்று சொல்லி
நான் யாருக்குப் புரிய வைத்து
வேறென்ன நிகழ்ந்துவிடும் இனி??

சோகமாய் அமர்ந்தால்
ஓரிரு வார்த்தையில் -
'குடும்பம் ஆச்சி, குழந்தைகள் இருக்கு..,
மறந்துடு; அவ்வளவு தான்' -
என்று சொல்பவர்களுக்கு
நீயென்பதோ நானென்பதோ
புரியாத; ஒற்றை வார்த்தை 'காதல்' மட்டுமே!

காதலித்தால் மறுக்கும் சமூகம்
நினைத்து அழுதால் கண்தொடைக்க
இயலாத மனிதர்கள்
பிரிக்க மட்டும் கொண்டு வரும் நியாயத்தில்
இனியாவது -
ஜாதியையும் மதத்தையும் ஏற்றத் தாழ்வையும்
நம்மை போன்றோரை பார்த்தாவது
அகற்றிக் கொள்ளட்டும்.

அன்றும் இன்றும்
மனதை மட்டும் அப்படியே
வைத்துக் கொண்டு
வெறும் மனிதர்களை கடந்து
நாட்களை கடந்து
வாழாத பொழுதுகளாய் வெற்றிடம் கொள்கிறதே
வாழ்க்கை; யார் காரணமாவார்???

இதோ, போகட்டும் பிதற்றல். என
முடித்துக் கொள்கிறேன்,
அழும் மனதோடு உதட்டை விரித்து
சிரித்துக் கொள்கிறேன்,
இன்னும் நூறு வருடம் வாழ
என் சுற்றத்திற்காய் - எல்லாவற்றையும்
தாங்கிக் கொள்கிறேன்,
யாரேனும் கேட்டால் நலம் என்றே
சொல்லிவிடுகிறேன்,
நீயும் அப்படியே சொல்;
நம்பிக் கொள்ளட்டும் உலகம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக